அவள் கண்கள் மாறும் பல வண்ணங்களைப் பிரதிபலித்தன.
மனம் எதிலோ சிக்கத் திணறி கசந்து போயிருந்தது. பரபரப்பு அவள் கண் இமைகளை இழுத்துக்
கட்டி பார்வையைக் கூர்மைப் படுத்தியது.
இதே பரபரப்பு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவின் போதும்
இருந்தது. கூலித் தொழிலாளியின்
மகளான இவள் காலை கோயிலுக்குச் சென்று, இறைவனையும் இறந்த அன்னையையும்
வேண்டி, தந்தையுடன் வலைதள மையத்தில் தேர்வு முடிவுகள் பார்க்க
வந்த மாணவர்கள் மொய்க்க, அதனுள் ஊடுருவிப் புகுந்த போதும் கூட்டத்தின்
நெருக்கம் மனக்கவலையை நொறுக்கவில்லை.
வியர்வையை மட்டுமே சட்டையாகக் கொண்ட தந்தை, தன் மகள் வெள்ளைச்சட்டை அணிய விரும்பவதை உணர்ந்திருந்தார். தகுந்த மருத்துவ சிகிச்சையின்றி நின்ற
தாயின் இதயம், தான் மருத்துவராக வேண்டும் என்ற வேகத்துடன் இவளிடம்
துடித்தது. அத்துடிப்பு
ஆர்வக்கனலை மூட்டியதன் விளைவாக எரிந்தது வீட்டு லாந்தர் நள்ளிரவிலும் அவள் படிப்பதற்காக. இப்படி சேகரித்த ஆற்றலுடன் தேர்வில்
பயிரிட்ட விதை 1178/1200 மதிப்பெண்களாக விருக்ஷமானது. மதிப்பெண்களைக் குவித்து,
மனதைக் குளிர வைத்த மகளுக்கு இனிப்பான வார்த்தைகளை மட்டுமே அளிக்க முடிந்தது
அந்த தந்தையால். மதிப்பெண்களைக்
கொண்டு மருத்துவ இலட்சியத்தை நிறைவேற்றுவதன் மூலம், தன் தாயைப்
போன்ற பல பாமர நோயாளிகளுக்குத் தாயாய் நின்று சேவை புரியலாம் என நினைவாலே மருத்துவரானாள்.
‘வளர்ச்சித் திட்டங்கள்’
எனப் பெயரிட்டுக் கொளுத்தப்படும் நல்லிரவுத் தொடர் வெடிகுண்டுகளின் சமீபம்
– மருத்துவத்தில் சேர NEET எனப்படும் ‘தேசிய நுழைவுத் தகுதித் தேர்வு‘
கட்டாயம் என அறிவித்தது.
பள்ளிப்புத்தகத்தை மட்டும் மனப்பாடம் செய்தால் படிப்பறிவு பெறலாம்
என்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் தான் வாழ்க்கையையே நிர்ணயிக்கிறது என்பன போன்ற
தகாத கருத்துக்களை திணித்து, அவள் மனதை குப்பையாக்கின சமூகமும்,
அதன் அமைப்பின் தோன்றிய பள்ளியும். நம் பாடப்பகுதிகளில் இருப்பது வாழ்க்கைக்குப்
போதாதென்றும் பருந்துகளுடன் வாழ கிளி உயர பறக்க வேண்டும் என்றும், தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்ற தன்னம்பிக்கையையும் போதிக்க ஓர் ஆசிரியர்
இல்லாது போனது அவள் துர்ப்பாக்கயமே. நுழைவுத் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண்கள்
பெறவில்லை. கோழி ருசியே, ஆனால் பிராமணனுக்கு கோழிக்கறி கொடுத்தால்
எப்படி முழுங்குவான், பாவம்.
முதலமைச்சருக்கான
மருத்துவ கல்லூரிச்சீட்டு ஒதுக்கீட்டில், கட்சிக்காரர்களுக்கும்,
சாதிக்காரர்களுக்கும் வாய்ப்பு தருவார் என பிற அமைச்சர்கள் எதிர்பார்க்கையில்,
வெகு சுலபமாக துரிதத்தில் கோப்புகளைப் புரட்டி, தந்தை கையொப்பம் என்ற இடத்தில் கைரேகை பதித்திருந்த விண்ணப்பங்களைத் தேர்ந்தெடுத்த
காமராசர் வளர்ந்து ஆட்சி செய்த அதே நாட்டில் தான் நாமும் வாழ்ந்து, வாக்களித்து வருகிறோமா என்ற சந்தேகம் உறுத்துகிறது. நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால்
தான் மருத்துவம் படிக்கத் தகுந்தவன் என்றால், மருத்துவம் கற்றுக்
கொடுக்கும் ஆசிரியர்களின் தகுதியை குறைத்து மதிப்பிடுவதாகாதா. கல்லைச் சிலையாக்குவதற்குத் தானே
சிற்பி, சிற்பத்தைக் கோபுரத்தில் வைக்க சிற்பி எதற்கு, கலைக்கூடம் எதற்கு, சிற்பிக்குக் கூலி தான் எதற்கு?
கல்வி கொடுக்கப்பட்டு ஏற்காமல் போனால் தவறு. வாய்ப்பே கொடுக்காமல் ஆற்றலைக் குறைப்பது
எந்த வித்த்தில் நியாயம்?
ஒவ்வொரு நாள் இரவுஉணவுக்கும்
காலை கூலி சுமக்க வேண்டிய நிலையில் நுழைவுத் தேர்வுக்கான தனிப்பயிற்சிக் கட்டணத்திற்காக
மெலிந்தால் கரைந்து மறைந்து விட வேண்டியது தான். பழத்தைத் தாங்கும் காம்பு போல தங்கள் பிள்ளைகளின் கனவுகளைச்
சுமந்து, சுரண்டப்பட்டு ஓடும் நடுத்தர பெற்றோர்களுக்கும் இது
மெல்ல முடியாத தின்பண்டம் தான். ஆக, இவ்விரண்டு இனத்தவர்களையும் நம்பிப் பிழைக்கும் மேற்த்தட்டு
வர்க்கத்தினவர்க்கு மட்டுமே எட்டும் கனியாக மாறியது மருத்துவம். அப்படி இனம், மொழி, உணர்வுகளால் வேறுபட்டவன் எப்படி பாமர மக்களுக்கு
இலவச மருத்துவ சேவை புரிவான். மருத்துவன் வணிகனாவான். அப்படிப் பாடத்திட்டத்தைத் தான் மாற்றலாம் என்றால், அதுவும்
வீட்டுப் பிரச்சனைகளை மீறி அப்பனிடம் அடியும் உதையும் தாங்கி, தாய்க்கு ஆறுதல் கூறி, சில மைல்கள் கடந்து வகுப்பறை சேரும்
மாணவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வத்தைக் குறைக்கலாம். மாறாக, கற்பிக்கும்
முறையில் மாற்றம் வேண்டும்; ஆசிரியர்கள் மதிப்பெண்களை வேட்டையாடச் சொல்லித்தந்து மாணவர்களை விலங்குகளாக்கும்
வேடனாய் இல்லாமல் பாடங்களை உணர்ந்து ஊக்கத்துடன் நடைமுறைப் பயன்பாட்டையும்,
அதன் முக்கியத்துவத்தையும் கடைந்து ஊட்டுபவராய் அமைந்து, வாழ்வின் மீதான அழகான ரசனை, தன்னம்பிக்கை, தேசபக்தி, அன்பு, தோல்வி,
வெற்றி இவற்றை உட்புகுத்த வேண்டும். நீட் அவசியமானால்
அது நுழைவுக்கல்ல, சிறந்த மருத்துவராக வெளியேறுவதர்க்கு.
வாழ்க்கையை கேளிக்கைகளுடன் பொழுதுபோக்காய்
சுற்றித் திரியும் மாணவர்களுக்கிடையே, இலட்சியப் பாதையில் நடைபோட்ட
போது, தடை வந்தவுடன் துணிவுடன் எதிர்க்கொண்டாள். உயரும் போது உயர்த்தியும்,
இறங்கும் போது தாழ்த்தியும் பேசும் சமூகத்தில் கண்ட தோல்வியை சகிக்க
முடியாமல் அதை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய டில்லி சென்றவர்களுடன்
அனுப்பி வைத்தார் அன்புத் தந்தை. விசாரணை முடிந்து, அறிவிக்கப்படும் தீர்ப்பு முடிவுகளை
அறிய இலவச தொலைக்காட்சி முன் கண்ணிமைக்காது அமர்ந்திருந்தாள். தீர்ப்பு தனக்கு எதிரானது என உணர்ந்த
மறுகணம், அவள் கண்கள் தொலைகாட்சியைப் பிரதிபலிக்கவில்லை,
மாறாக கனத்து அவள் துயரமும், ஏக்கமும்,
இயலாமையும் பொங்கி கண்ணீராய் வழிந்த்து. தாயின் சேலை நனையும்படி அதை கட்டி
அணைத்து கதறிய அழுகையில் ஒன்பது நாட்கள் கரைந்தன. கையில் அச்சேலையுடன், விரக்தியில் ஊறிய அவள் விழிகள் வீட்டுப்பரண் மீது படிந்து மௌனமாயின.
தன் பல வருடக்
கனவின் முதலீடாக தான் உழைத்துப் பெற்ற மதிப்பெண்களுக்குள் மதிப்பில்லை என்றும் அதனால்
தான் மருத்துவ சேர்க்கையில் வடிகட்டப்பட்ட கசடானதும் அவள் மனதின் புண்களின் மேல் தீயை
எறிந்தது. அதிலிருந்து
எழுந்த புகையை கதகதப்பிற்கு நுகர்ந்தும், அத்தணலால் குளிர் காய்ந்தும்
பிழைக்கிறார்கள் பலர். மருத்துவராகாவிட்டால் என்ன, தான் எடுத்துக் கொண்ட செயலை
நிறைவேற்றத் தவறினால், தன்வாள் கொண்டே தன்னை மாய்த்துக் கொள்ளும்
சாமுராய் ஆனாள். மதிப்பெண்கள்
பெற்றும் படிக்க இயலாக கல்வித் திட்டம் தனக்குத் தேவை இல்லை என புறக்கணித்து,
தன் இறப்பால் புரட்சியை எழுப்பி பகத்சிங்கின் பிள்ளை ஆனாள்.
தான் எப்போது எப்படி
வாழ வேண்டுமென முன்கூட்டியே அட்டவணை போட்டு எங்கு எதற்காக ஓடுகிறோம் என்றே தெரியாமல்,
அங்குமிங்கும் திரிந்து தன் கூட்டை மறந்து வாழும் இயந்திர வாழ்க்கை ஒரு
புறமும், ஆன்மீகவாதிகள், பத்திரிக்கைகள்,
விளம்பரங்கள், வியாபாரிகள், அரசியல்வாதிகள், தீவிரவாதிகள் என்ற போர்வைக்குள் ஒளிந்திருக்கும் போலிகள், தங்கள் வாழ்நாள் முழுவதையும் மற்றவர்களின் உழைப்பையும், ஊதியத்தையும் உறிஞ்சி, அடக்கியாளும் தங்களை புத்திசாலிகள்
என்று எண்ணிக்கொண்டு, தான் இன்னொருவனிடம் ஏமாறுவதறியாத மூடர்க்கூடத்தைக்
கொண்டு கீழ்த்தரமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த சமூகம் சர்ச்சைகளை உருவாக்கி,
போராட்டக் குமிழிகளை கொதிக்க விட்டு, பலநூறு இந்திய
மொழிகளுக்கப்பாற்பட்டு, ஊடகம் என்னும் இயந்திர மொழியால் மக்களை சலவை செய்து, கிளுகிளுப்பூட்டி, ஆற வைத்து, மீண்டும்
இதே சுழற்சியை மேற்கொள்ளும் இயல்போடு இயக்கப்பெற்று வருகிறது. இவை அனைத்தும், இப்பொழுதும் நடந்தாலும், ஆக்சிஜனோடு சரியோ தவறோ ஒருவிதமான
அறிவையும் சுவாசிக்கும் விழிப்புணர்வு தற்போது ஏற்படுவது மாற்றத்திற்கான இடைநிலையாக
நம்பப்படுகிறது. இளம்
பிராயத்தில் கோழைத்தனமாக தற்கொலை செய்துகொண்டதாக அவள் குற்றம் சுமத்தப்படுகிறாள்.
அப்படியானால் தூக்கிலிடப்பட்ட குற்றவாளியின் குற்றதிற்கான காரணத்தை எப்போது
எப்படி தூக்கிலிடப்போகிறோம்?!
#Jaye